Wednesday 11 January, 2012

வாசிப்பு!




அகம் முழுக்க 
அடர்த்தியாய் இருள்!
புழுக்கம் குறைக்க 
புத்தகம் திறக்கிறது 
மனது!

கால நெரிசலில் 
களவு கொடுத்த 
நித்திரை எல்லாம் 
மீட்டு கொடுக்கும்  ஒரே 
மாத்திரை !

குறியீட்டை ஒலியாய்,
எழுத்துகளை அர்த்தமாய்,
சிந்தைக்கு ஊட்டும் 
விந்தை! 

மூளைசுவர்களில்
திரையோவியம் 
கொட்டிவிட்டு போன 
சாயம் நீக்கும் மாயம் !

ஆட்களை  படித்தேன் 
குழப்பம் வந்தது! 
நூல்களை  படித்தேன் 
தெளிவு தந்தது!

பார்வையற்ற தோழரெல்லாம் 
பத்து விரலில் படிக்கிறார்!
பணமற்ற தோழர்கள்தாம் 
படிப்பறிவின்றி துடிக்கிறார்!

யாம் கொண்ட அச்சமெல்லாம் 
குறுஞ்செய்தி தாண்டி
வேறேதும் வாசித்தறியா 
எம் இளைய 
தலைமுறை பற்றியே! 

Tuesday 10 January, 2012

பால்யம்


உடைந்து போன 
பலூனில்
விடாது 
வழிகிறது கண்ணீர்! 

திண்டுக்கல்லில் இருந்து 
திருச்சி வழியாக 
மதுரை பயணிக்கிறது
எங்கள் 
வீட்டு நிலைக்கதவு!
விலை"மதிப்பற்ற" பயணசீட்டுகளை 
கொடுத்த படி . 

பிரம்படி கனவுகளில்
நெடுந்தூக்கம் கேட்கிறது
மதிப்பெண் வரும் நாட்கள்! 

ஓட்டைப்பையில் 
வழிய விட்ட 
சில்லறையில் சிக்கிகொண்டது 
தவறிப்போன 
தின்பண்டம்.

நினைவுச்சாலைகளை
பால்யம் 
கடக்கும் போதெல்லாம் 
உதட்டோரத்தில் இளைப்பாற 
அமர்கிறது 
நிற்காது அலைகின்ற
புன்னகை!