தினசரி கனவுகளில்
படபடத்துக்கொண்டிருக்கிறது
ஒரு வெள்ளைத்தாள்!
வெறிச்சோடிய
தெருவின் நிசப்தத்தை
சுமந்த படி,
வாடிக்கையாளன் தேடும்
விபச்சாரியின் கண்களோடு,
கால் தடங்கல் ஏதுமில்லா
கடற்கரை மணல் போல...
நானோ
எழுதும் பொருள்
தேடிக் களைத்து
பேனாவை மூடிவிட்டு
அடுத்த நாள்
கனவுக்காய்,
பாதுகாக்கிறேன்
என் வெள்ளைத்தாளை!
ஏற்பட்டுவிட்ட வலிகளுக்காகவும், எழுதும் போது நேரும் நினைவுகளின் வருடலுக்காகவும் ... உங்கள் வாசிப்பின் போது நேரும் மன நிறைவுக்காகவும், உங்கள் விமர்சனத்திற்கான என் காத்திருப்புக்க்காகவும், எழுதுவதில் மகிழ்ச்சி!!!!
Saturday 19 September, 2009
தேடிக்கொண்டிருக்கிறேன்...
வழியறியா காட்டிலிருந்து
அள்ளி எடுத்து,
அரவணைத்து,
பாலைவன சுழியில்
தள்ளி
பறந்து போனாய்!
தண்ணீர் தேட மறந்தது,
உன்னை தேடிக்கொண்டிருக்கிறேன் நான்!
சன்னலோரம்...
தத்தம்
குழைந்தகளின்
அழுகையை நிறுத்த,
பேருந்தின் சன்னல் வழி,
எதை எதையோ
காட்டிக்கொண்டிருக்கிரர்கள்
பெற்றோர்கள்!
நானோ...
என் மனதின்
விசும்பலை நிறுத்த,
உன்னை காட்டிக்கொண்டிருக்கிறேன்
என் ஒவ்வொரு
பயணத்திலும்!
Tuesday 8 September, 2009
கனவில் தொலைத்தது...
தொலைந்ததா
தொலைத்ததா
என்பது மறந்து,
தேடிக்கொண்டிருப்பதில்தான்
மகிழ்ச்சி!
கனவில் தொலைந்த
உன் புகைப்படத்தையும்,
கனவாய்
தொலைந்த உன்னையும்!
Thursday 3 September, 2009
எங்கள் கவலையெல்லாம்.......
நெடுஞ்சாலை முட்புதராய்
புறக்கணிக்கப்பட்ட
வாழ்க்கையில்,
எதேச்சையாய் நேரும்
காயப்படுத்துதலில்தான்
கிடைக்கப் பெறுகிறது
கவனம் !!!
மலர்ச்செடியாய்
இல்லாது போன
கவலையை தாண்டி,
முட்கள்
தானாய் சென்று
காயப்படுத்தாதெனும்
உண்மையையும் தாண்டி,
மலர்செடியாய்
இருந்து இருந்தால்,
தவிர்க்கப்பட்டிருக்கும்
காயங்கள்
எண்ணியே
எங்கள் கவலையெல்லாம்...!!!
Subscribe to:
Posts (Atom)