Friday 24 July, 2009

முகமூடிகள்!!!!!




முகமூடிகளால்
ஆகிப் போனது
இந்த
வாழ்க்கை!

அசட்டு சிரிப்புகளில்
தொடங்கி,
அழுகாச்சி வரை
வித விதமாய்
கழட்டி,
மாட்டி கொள்கிறார்கள்
முகமூடிகளை!!

சுட்டாலும்
வெண்மை தரும்
சங்குகளில்
செய்யப்பட்டிருக்கிறது
முகமூடிகள்!
முகங்களை
முற்றிலுமாய்
மறைப்பதற்காய்....

நிஜமான
முகங்கள்
தூரப்பட்டாயிற்று!
அதன்
பிம்பங்களை
பார்த்திராது
போயின....
எம்
கண்ணாடிகள்!

எல்லோருக்கும்
பிடிக்கும் படியான,
முகமூடியொன்று,
செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது!
எனக்காக....

அதுவரை
என்
முகத்தை, நீங்கள்
தாராளமாய்
வெறுக்கலாம்!!!

Saturday 18 July, 2009

பிள்ளை மனம்!




நாட்களுக்கு
பின்னாள்
ஒளிந்து கொண்டு,
எட்டித்
தலை காட்டுகிறது
உன் ஞாபகங்கள்!

மழலை
கிறுக்கலாய்
திருத்தங்களுக்கு
அப்பாற்பட்டு,
சிலேட்டை நிறைக்கிறது
நீ
கொடுத்து,
எடுத்து சென்ற
காதல்....

நிகழ்கால நிஜத்தை
ஒவ்வொரு முறையும்,
புத்திக்கு ஊட்ட....
பின்னாலேயே
திரியவிடுகிறது,
நீ களவாடிய
என் சுயம்!

சிற்றெறும்பாய், நீ
கடித்து சென்ற
இடத்தை
சொல்ல தெரியாமல்,
கால் பரத்தி,
கை விரித்து....
விசும்பி அழுகிறது
என்
பிள்ளை மனம்!

Monday 13 July, 2009

சுகுமார் சொல்......



எல்லாப் பொழுதுகளிலும் ஏதேனும் இவ்வாறு கிடைத்துக்கொண்டே இருக்கும் உன்னிடம், அசைபோட. இன்று, இது எனக்கானதாய் மிக நேரடியாக கிடைத்ததில் சற்று சலனம்தான் அடி மனதில்.

உன்னை போல் நேர்த்தியாய் எழுத இனிமேலாவது முயற்சிக்கிறேன். உனது படைப்பொன்று எனது blog - இல் ஒதுங்கியதில், சற்றே கணம் கூடியது இந்த தளத்திற்கு. நன்றி...

கவிதைக்கும், என் மேல் எடுத்துக்கொள்ளும் கவனத்திற்கும்.

--------------------------------
நீங்களில் இருக்கிற நான்
நாங்களில் இருந்து எழுதிக்கொள்வது ........

ஒரு மழை நாளில்
பிரியம் என்றாய். காதல் என்றாய்.
விளங்க முடியா கவிதை என்றாய்.
இன்னொரு மழை நாளில்
தோல்வி என்றாய். காயம் என்றாய்.
மீளாத்துயரம் என்றாய்.

நண்பா- பதிலென்று உனக்கு எதைச் சொல்ல?

யுத்த நாளுண்டு. அதற்க்கு மறுநாளுண்டு.
மழை நாளென்று எதுவும் நினைவில் இல்லை.
இருப்பதும் இல்லாதிருப்பதுமே
வெற்றியும் தோல்வியும்.
"மீளாத்துயரமென்று எதுவும் இல்லை
மீளாதிருத்தலே துயரம்!"

குறுக்கும் நெடுக்குமாக
எல்லாத்திசைகளையும் தொட்டு திரும்புகின்றன
உங்கள் காலக்கோடுகள்
ஆரம்பமும் முடிவும் தெரியாமல்
வட்டப்பாதையில் சுற்றுகின்றன
எங்கள் யுத்த கோடுகள்
உங்கள் பூமியை போல.

சுதந்திரம் என்பது ஒற்றைத்தூரிகை
நீங்கள் தொலைத்துக் கொண்டிருக்கிறீர்கள்
நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம்!!!

- சுகுமார்

Wednesday 1 July, 2009

இருளும், இருள் சார்ந்த எண்ணங்களும்....




இருட்டு கறுப்பை குறிப்பதாய் தெரிவதில்லை. இருள் நிறத்தோடு ஒப்பிட முடியாததாய் தனித்து நிற்கிறது. மங்கலான வெவ்வேறு நிற வெளிச்சங்கலோடும் இருட்டு முகம் காட்டுகின்றது.என்னதான் வெளிச்சம் இருட்டுக்கொரு விடையாய் வந்தாலும், மௌனம் பேசும் இருட்டு எந்த கேள்வியையும் கேட்டதை தெரியவில்லை.

சிறு வயதில், இருள் பயத்தை தவிர வேறு எதையும் பெரிதாய் தந்ததில்லை. அனால் இப்போது இருட்டு எண்ணங்களை வாரி வாரி வழங்கும் அட்சயபாத்திரமாய் படுகிறது. மெழுகுவர்த்தி துணையோடு மௌனம் பேசி அழுது உருகி கிடப்பது எனக்கு பிடித்த விசயமாய் ஆனாலும், அந்த வெளிச்சமும் தீர்ந்த பின் கிடைக்கும் சூன்யம் இன்னும் அலாதி இன்பம் தருகிறது.எல்லாம் இருண்டு போன, கனத்த மன ஓட்டங்களின் அலசலில்தான் "சுயம்" தட்டுப்படுகிறது.இப்படி அகத்தை எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டு, புறத்தை இருட்டிக்கொள்கிறது இருள்.

இருட்டிற்கென்று எப்படி முகம் கிடையாதோ, அதே போல் இருட்டில் உங்களுக்கும் முகம் கிடையாது. இருட்டை தனிமையில் ரசிப்பதும், துணையோடு ரசிப்பதும், கூட்டத்தோடு ரசிப்பதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. தனிமையிலும், துணையுடனும் ரசிக்கும் இருட்டின் அழகை "நிசப்தம்" அலங்கரிக்கிறது. கூட்டத்தோடு நோக்கும்போது "சத்தம்" அழகு சேர்க்கிறது. குரல்கள் முகங்களை மாறும் வித்யாசமான நேரம் அது.

இருட்டிற்கென எல்லைகள் இல்லாமல் போனாலும், வெளிச்சத்தின் துவக்கத்தில் முடிந்து போகிறது இருள். இருட்டு மின்சாரம் சார்ந்ததாய் உணரப்பட்டாலும், இருள் நிரந்தரமானது. இயற்க்கை சார்ந்த நாட்களும், நாட்கள் சார்ந்த இரவுகளும், இரவுகள் சார்ந்த இருளும் நிரந்தரமானது. பகல் நேரங்களில் கூட மூடிக்கிடக்கும் பெட்டிகள் துவங்கி அறியாமை சூழ்ந்த மனங்கள் வரை, இருள் நிரந்தரமாய் அடைகாக்கபடுகிறது.



இருட்டில் எனக்கு பரிச்சயமான முகங்களை மனத்திரையில் ஓடவிட்டு பார்ப்பது எனக்கு பிடித்தமான விஷயம். ஒரே முகத்தின் பல பாவனைகளை இருட்டு திரையிட்டு காட்டும். சிறு வயதில் இருந்தே பற்பல முறை இருட்டும், இருட்டில் உணரப்பட்ட இயலாமையும் தவிர வெரேதும்... பார்வையற்றோரை பற்றிய எண்ணங்களை எழுப்பியதில்லை. எத்தனையோ சந்தர்ப்பங்களில் இருள் வெளிச்சத்தை தாண்டிய ஆழமான எண்ணங்களை எழுப்பிக்கொண்டே இருக்கிறது. "தாகம் தீர்ந்த பின் யாரு தண்ணிரை பற்றி நினைப்பதில்லை". வெளிச்சம் கொடுக்கும் சுதந்திரம் எண்ணங்களை கட்டிப்போட்டு விடுகிறது.

இருட்டு மௌனத்தை குறிக்கிறது. குரல்களில் அடையாளம் தேடுகிறது. அறியாமையின் பிரதிபலிப்பாயும், இயலாமையின் எடுத்துக்காட்டையும் இருக்கிறது.வெளிச்சம் இலேசானதாகவும், இருள் எடை கூடியும் உணரப்படுகிறது.இருட்டு உன் பிரிவையும், பிரிவின் வலியையும் கூட குறிக்கிறது. இப்போதெல்லாம் வெளிச்சத்தை விட இருளுக்காய் மனம் ஏங்குகிறது.