Saturday 19 September, 2009

வெள்ளைத்தாள்!

தினசரி கனவுகளில்
படபடத்துக்கொண்டிருக்கிறது
ஒரு வெள்ளைத்தாள்!
வெறிச்சோடிய
தெருவின் நிசப்தத்தை
சுமந்த படி, 
வாடிக்கையாளன் தேடும் 
விபச்சாரியின் கண்களோடு, 
கால் தடங்கல் ஏதுமில்லா 
கடற்கரை மணல் போல... 

நானோ
எழுதும் பொருள்
தேடிக் களைத்து
பேனாவை மூடிவிட்டு  
அடுத்த நாள்
கனவுக்காய், 
பாதுகாக்கிறேன் 
என் வெள்ளைத்தாளை!

17 comments:

  1. கவிதை நல்லாருக்கு தம்பி!

    //வாடிக்கையாளன் தேடும்
    விபச்சாரியின் கண்களோடு//

    இந்த விடயத்தை தொடாமல் ஏன் கவிஞர்கள் எழுதுவதில்லை?

    23 வயது தம்பி இதை தொட்டு எழுதுவது எனக்கு இயல்பாய் தோன்றவில்லை அதனால்தான் சொன்னேன். தவறாக எண்ண வேண்டாம்.

    ReplyDelete
  2. நல்லாருக்கு தலைவா...!

    ReplyDelete
  3. நன்றி அண்ணா...

    இதில் தவறாக கருத எதுவுமில்லை.

    அனால் இவ்வாறு எழுதுவதில் இயல்பு மீறி எதுவும் இல்லை என உணர்த்த விழைகிறேன்.

    "விபச்சாரி" - அனேக கவிஞர்கள் இதை தொடுவதன் காரணம், அந்த உவமைக்கான வீச்சு தேவைப் பட்டிருக்கலாம்.

    23 வயது - எத்தனை விபச்சாரிகளை நான் கடந்திருப்பேன்?? நிச்சயமாய், எப்போதோ ஒரு முறை... அதுவும் ஒரு பேருந்து நிலையத்தில் பார்த்தது.

    எல்லாமே ஊடகங்கள் கற்று தந்தது. நண்பர்கள் சொல்லக் கேட்டது. அதைப் பற்றி எழுத, அதை அனுபவத்தில் உணர்ந்திருக்க அவசியம் இல்லை. சாவா தீவு பற்றி எழுத, நான் கண்டிப்பாய் அங்கு வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை...

    இந்த வயதிற்கு இதை எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் புரிவதர்க்கில்லை. 10 வயதிலேயே உலகத்தை நிர்வாணப் படுத்தி அனைத்தையும் உணர்த்தி விடுகிறது இந்த சமுதாயம். இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.

    தங்கள் விமர்சனங்களையும், வருகையையும் தொடர்ந்து எதிர் பார்த்து காத்திருக்கும் தம்பி,

    தாமோதரன்.

    ReplyDelete
  4. நன்றாக எழுதுகிறீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  5. @ வானம்பாடிகள்

    @ கவிதை(கள்)

    நன்றி உங்கள் பார்வையிடளுக்கும் , பாராட்டுகளுக்கும்.

    உங்கள் வார்த்தைகள் எனை நல்ல கவிதைகள் எழுத தூண்டுகிறது,,,

    ReplyDelete
  6. நல்ல கவிதைகள் இருக்கு உங்ககிட்ட.ஆனா உங்க பேரை மாத்துங்க.அப்பத்தான் கருத்துச் சொல்லுவேன்.அன்போடு ஹேமா.

    ReplyDelete
  7. உங்களின் கவிதைகள் நல்ல இருக்கு.
    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
    தோழியர் ஹேமா சொன்னது போல்
    எதற்கு இந்த தலைப்பு.
    ஒருவேளை உங்களுக்கு மிகவும் பிடித்தவர்
    உங்களை பிடிக்கவில்லை என்று சொல்லி
    விட்டாரோ? அது அவருடைய இழப்பு தவிர
    உங்களுடையது அல்ல. அதனால் நீங்கள்
    எங்களை பார்த்து கேட்கவேண்டிய அவசியம் இல்லை. உங்களை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
    இன்னமும் பிடிக்கும் ... சற்று யோசியுங்கள் ...

    ReplyDelete
  8. @ ஹேமா

    @ வேல் கண்ணன்

    தோழி ஹேமாவுக்கும், தோழர் வேல் கண்ணன் அவர்களுக்கும்....

    பார்வையிடலுக்கும் உற்சாகம் ஊட்டும் வார்த்தைகளுக்கும் நன்றி!

    இந்த பெயரை நான் ஆழ்ந்து யோசித்தெல்லாம் உபயோகிக்கவில்லை.

    இந்த வலைப்பதிவை தொடங்கிய வேலையில் இருந்த மனநிலை காரணமாய் இருந்திருக்கலாம். இப்போது உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து மாற்ற நினைக்கும் போதுதான் எதுவும் தோன்றவில்லை. உங்கள் நண்பனுக்கு நீங்களே பெயரிடுங்களேன்!

    நான் எழுதும் எழுத்துக்கு என் இரண்டு மூன்று நண்பர்கள் தான் எப்போதும் வாசகர்கள். அவர்கள் சொல்தான் இந்த வலைப்பதிவை எழுதக் காரணம்.

    இப்போது முகம் தெரியா இத்தனை நண்பர்களின் அறிமுகம், நல்ல கவிதைகளை எழுத தூண்டுகிறது. நிச்சயமாய் இனி தரமாய் எழுத முயல்வேன் எனும் நம்பிக்கையோடு...

    தாமோதரன்.

    ReplyDelete
  9. கடைசியாய் இருக்கும் கவிதையின்படி "ஒற்றை வெள்ளைத்தாள்" அல்லது "ஒரு பேனா" என்று மாற்றிவிட்டு,கீழே உங்கள் பெயரை முழுதாகவோ சுருக்கியோ போட்டுப் பாருங்களேன்.

    ReplyDelete
  10. //கடைசியாய் இருக்கும் கவிதையின்படி "ஒற்றை வெள்ளைத்தாள்" அல்லது "ஒரு பேனா" என்று மாற்றிவிட்டு,கீழே உங்கள் பெயரை முழுதாகவோ சுருக்கியோ போட்டுப் பாருங்களேன்//
    வழிமொழிகிறேன் அல்லது தாமோதரன் கவிதைகள்

    ReplyDelete
  11. தரன் கவிதைகள்

    ReplyDelete
  12. அணைத்து கவிதைகளும் அருமையாக உள்ளது.........
    தொடருங்கள் உங்கள் பணியை ........

    ReplyDelete
  13. @ஊடகன்

    பாராட்டுக்களுக்கு நன்றி !!!

    அனைவருக்கும்

    நண்பர்கள் அறிவுரைக்கிணங்க இன்றிலிருந்து,

    "என்னை என் உங்களுக்கு பிடிக்காமல் போனது???" மருவி "முகமூடியணிந்த பேனா" வாய்.....

    ReplyDelete
  14. தம்பி நான் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர்களோ என்ற எண்ணத்தில் இதை எழுதுகிறேன்.

    இளைமைப்பருவம் என்பது பல இனிமையான அனுபவங்களை நுகரும் பருவம். நட்பு, காதல், தனிமை, உழைப்பு, புரட்சி, இயற்கை என்று பல நிலைகளில் அனுபவம் பெறும் பருவம். இந்த அனுபவங்களை தொட்டு எழுதும் கவிதைகள் இயல்பாகவும் தென்றலைப்போல் இனிமையாகவும் அதிக வீச்சு கொண்டதாகவும் இருக்கும். நீங்கள் இவைகளைப்பற்றி எழுதுவதுதானெ இயல்பு என்று கேட்டிருந்தேன். விபச்சாரி போன்ற விடயங்களை தொடவேண்டாமே என்ற என் எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தேன். அவ்வளவுதான்.

    என் சொல்லாக்கம் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete